சாதி என்னும் கொடிய விஷம் ; மேலவளவு முருகேசன் படுகொலை நினைவு நாள்.
ஆண்டாண்டு காலமாக சாதியின் பெயரால் ; மதத்தின் பெயரால் எண்ணற்ற இன்னல்களுக்கு உள்ளாக்கப்படும் ஒடுக்கப்பட்ட ஏழை ; எளிய தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்க சாதியினரின் சாதி வெறிப்போக்கினை, ஆதிக்க மனோபாவத்தினை உலகினுக்கு உணர்த்திடும் ஓர் கொடுரச் சம்பவமாக வரலாற்றில் நீங்காது நிலைத்துவிட்டது மேலவளவு படுகொலை.
1996 ஆம் ஆண்டு பட்டியல் சமூகத்தினை சேர்ந்த முருகேசன் என்பவர் மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்ற ஒற்றைக் காரணத்திற்காக ஆதிக்கசாதியினர், முருகேசன் மற்றும் அவரது தம்பி உள்ளிட்ட 6 பேர் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது அநியாயமாக வெட்டிக்கொலை செய்த தினம் இன்று.(1997 ஜூன் 30)
அது தொடர்பான வழக்குகள், விசாரணைகள் உள்ளிட்டவை ஒருபுறம் இருப்பினும் இங்கே நாம் கவனிக்க முனைவது எளியோர்கள் அரசியல் அதிகாரம் அடைவதையோ அல்லது தங்களுக்கு நிகராக மனிதர்களை போன்று வாழ்வதையோ பொறுத்துக்கொள்ள இயலாத சாதி வெறி கும்பல் எளிய மக்கள் மீது கட்டவிழ்த்துவிடுவது இவ்வாறான வன்முறையைத்தான்.
மேலவளவு, திண்ணியம், தர்மபுரி இளவரசன், உடுமலைப்பேட்டை சங்கர், கோகுல்ராஜ் என இன்னும் இன்னும் சாதியின் பெயரால் இங்கே நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் ஏராளம், ஏராளம். ஆம், சாதி இன்னும் இந்த சமூக கட்டமைப்பில் ஆழ வேரூன்றியுள்ளது. அதனை கழையெடுத்திட வேண்டிய சக்திகள் வாக்கு வாங்கி அரசியலுக்காக அதனை மறைமுகமாக வளர்த்தெடுத்துவருவது உண்மையில் வருந்தத்தக்க ஒன்றே.
சக மனிதர்களை, மனிதர்களாக பாவிக்க விரும்பாமல் அவர்களை சாதியின் பெயரால் ஒடுக்கிட முயலும் சாதிய மனோபாவத்தினை வேரறுக்கவே ஜனநாயக சக்திகள் ஓர் அணியாய் களம் காண வேண்டிய நேரம் இது.
Comments
Post a Comment